திசையன்விளை, மார்ச் 17: திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வியியல் துறை மற்றும் செஞ்சுருள் சங்க இயக்கம் சார்பில் இனிமையான வாழ்விற்கு யோகா மற்றும் விளையாட்டின் பங்கு என்ற தலைப்பில் மாநில அளவிலான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.கல்லூரி முதல்வர் டாக்டர் பிரேம் அரசன் ஜெயராஜ் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் சந்திரசேகர் வரவேற்றார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் யுகேஷ், ஆங்கிலத்துறை பேராசிரியை கலா வாழ்த்தி பேசினர். சிறப்பு விருந்தினர்களை வணிகவியல் துறை பேராசிரியர் ஒயிட்டன் சகாயராஜ் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்நாடு மாநில இயற்கை மற்றும் யோகா மன்றத்தின் தலைவர் டாக்டர் சிவசைவ விநாயகம், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் அமலவளன், திருநெல்வேலி ஆசன ஆண்டியப்பன் யோகா மையத்தின் இயக்குநர் ஐயப்பன், யோகா பேராசிரியை கோதை நாயகி, யோகா பயிற்சியாளர்கள் வக்கீல் ஞானசேகரன், கணபதி அம்மாள், ராஜலெட்சுமி ஆகியோர் யோகா செயல்முறைகள் மற்றும் வாழும் கலை குறித்து மாணவ மாணவிகளிடையே கலந்துரையாடினர். தமிழ்த்துறை பேராசிரியர் பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் திசையன்விளை மனோ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். செஞ்சுருள் சங்க அலுவலர் பேராசிரியர் அழகேஷ் நன்றி கூறினார்.