சாயல்குடி, மார்ச் 13: மேலமுந்தல் கடற்கரையோரங்களில் கடல் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு நிலவி வருவதால் அகற்ற வேண்டும் என கிராமமக்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடி ஒன்றியம், மேலமுந்தல் கடற்கரை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள கடலில் மீன்பிடி தொழில் நடந்து வருகிறது. கடற்கரைக்கு மீனவர்கள், பெண்கள், மீன் வியாபாரிகள், விற்பனையாளர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். கடலில் மீன்பிடித்து வரும் போது மீன்வலையில் கடல்புற்கள், தேவையற்ற சங்குகள், நண்டு ஓடுகள் போன்ற கடல் உயிரினங்கள் சிக்கிக் கொண்டு வருவதுண்டு. கரையில் வலையிலிருந்து மீனை பிரித்தெடுக்கும் மீனவர்கள், வலையில் சிக்கி வந்துள்ள தேவையற்ற கழிவுகளை கடற்கரையில் அப்படியே போட்டு விட்டு செல்வது வழக்கம். அந்த கழிவுகள் கடற்கரையில் தேங்கி குப்பையாகி குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு நிலவி வருகிறது. மீன் ஏலம் தளம், வலை உலர்தளம், வலை பாதுகாப்பு கூடம் போன்ற பகுதிகளிலும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.