பெரம்பலூர், மார்ச் 11: ஓய்வுபெற்ற ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வலியுறுத்தி பெரம்பலூரில் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாதாந்திர ஓய்வூதியம், பணிக்கொடை கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் மாவட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின்மோட்டார் இயக்குபவர் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளார் சின்னப்பிள்ளை வரவேற்றார். மாவட்ட பொருளாளர் நாகராஜன், மாவட்ட ஆலோசகர் அன்பரசன், ஒன்றிய தலைவர்கள் பெரம்பலூர் அர்ஜுனன், வேப்பூர் ரவி, ஆலத்தூர் அன்பழகன் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி வேப்பூர் மற்றும் வேப்பந்தட்டை ஒன்றியங்களில் ஊதியம் நிர்ணயம் செய்து நிலுவைத்தொகையை வழங்குவதோடு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும். 2020ம் ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் போனஸ் ரூ.1,000 அனைவருக்கும் வழங்க வேண்டும். 2016ம் ஆண்டு முதல் டேங்க் சுத்தம் செய்வதற்கு கூலித் தொகை வழங்கவில்லை. எனவே நிலுவை தொகையை தாமதமின்றி வழங்குவதோடு தொடர்ந்து தடையின்றி வழங்க வேண்டும்.