மன்னார்குடி, மார்ச் 11: வடுவூர் கோதண்ட ராமசுவாமி கோயிலில் தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.திருவாரூர், மன்னார்குடிக்கு அடுத்த வடுவூரில் உள்ள புகழ் பெற்ற வைணவ தலமான வடுவூர் கோதண்டராமர் ராமர் கோயிலில் வருடம் தோறும் ராமரின் நட்சத்திரமான புனர் பூசத்தன்று தெப்பத் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.விழாவையொட்டி கோயிலில் இருந்து சீதா தேவி, லெட்சுமணன், ஆஞ்சநேய சுவாமி சமேதராக புறப்பட்ட கோதண்டராமர் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார். அதனைத் தொடர்ந்து கோயிலின் பின்புறம் உள்ள சரயு புஷ்கரணி தெப்பக் குளத்தில் கட்டப் பட்டிருந்த பிரமாண்டமான தெப்பத்தில் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து விசேச தீபாராதனைகள், நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது.