நாகர்கோவில், மார்ச் 11: கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்டு வருவதற்காக அவர்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் அங்கு மீன்பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் உட்பட தமிழக மீனவர்கள் 721 பேர் அங்குள்ள தீவுகளில் சிக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை சென்று சந்தித்தனர். முதல்கட்டமாக இந்தியாவிலிருந்து ஈரானுக்கு சுற்றுலா விசாவில் வந்தவர்கள், கல்வி விசாவில் வந்தவர்களுக்குத்தான் முதலில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர்தான் மீனவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட மற்றவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு இன்னும் ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.