சாயல்குடி, மார்ச் 11: சாயல்குடி கடற்கரை பகுதியில் கடல் அலையால் கரைகள் சேதமடைந்து பனைமரங்கள் சாய்ந்து விழுந்து வருவதால், தடுப்புச்சுவர் கட்ட மீனவ கிராம மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் வளைகுடா கடற்பகுதியான கன்னிராஜபுரம், ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், கீழமுந்தல், மாரியூர், வாலிநோக்கம் வரையிலான 15க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவர்களுக்கு அரசு கட்டிகொடுத்த சுனாமி குடியிருப்பு வீடுகள் மற்றும் சொந்தமாக கட்டிய ஓடு, குடிசை வீடுகளில் கடற்கரையோரம் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிக ஆழமானது என்பதால் எந்நேரமும் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். அதிகாலை, இரவு நேரங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட பருவநிலை மாறும் காலங்களில் கூடுதலாக அலை சீற்றமாக இருக்கிறது. இதனால் அலை கரையை சேதப்படுத்தி வருகிறது.