சாயல்குடி, மார்ச் 10: சாயல்குடி கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சாயல்குடி பகுதியின் மன்னார் வளைகுடா கடல் பகுதியான கன்னிராஜபுரம் ரோச்மா நகர், மூக்கையூர் முதல் ஏர்வாடி வரை 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் உள்ளன. ஆழமான பகுதியான கீழமுந்தல், மூக்கையூர், வாலிநோக்கம் கடல்களில் வல்லம், நாட்டு படகில் சென்றும், கரை வலை விரித்தும் மீன் பிடித்து வருகின்றனர்.கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நடந்ததால் சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. திருவிழா முடிந்ததால் தற்போது இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். கூடுதல் விலையானாலும், அதிக விற்பனையாகும் சீலா மீன், இறால் மீன் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மற்றும் கரைவலை மூலம் மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.