கோவை, மார்ச் 10: பிளஸ்2 கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கான தேர்வு சற்று கடினமாக இருந்ததாகவும், சென்டம் எடுக்க வாய்ப்பு குறைவு எனவும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்து வருகிறது. மொழிப்பாடத்தேர்வுகள் முடிந்த நிலையில், நேற்று முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்கியது. இதில், கோவை மாவட்டத்தில் நடந்த கணித தேர்வினை 13,032 பேர் எழுதினர். 381 பேர் ஆப்சென்ட். வணிகவியல் தேர்வினை 17,615 பேர் எழுதினர். 723 பேர் ஆப்சென்ட். மேலும், விலங்கியல் பாடத்தேர்வை 611 பேர் எழுதினர். 84 பேர் தேர்வு எழுதவில்லை. கணித தேர்வு குறித்து புனித காணிக்கை பள்ளி மாணவி முபஷிரா கூறுகையில், “ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று எளிதாக இருந்தது. ஆனால், 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக இருந்தது. இதனால், நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு குறைவு” என்றார்.