ஈரோடு, மார்ச் 5: கோபியில் பாதாள மின்கேபிள் திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதையடுத்து 2 மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் மின் இழப்பை குறைக்கவும், விபத்துக்களை குறைக்கவும் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் பாதாள மின்கேபிள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே செயல்படுத்த முடிவு செய்திருந்த இத்திட்டம் முக்கிய நகராட்சி, பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டம் ஈரோடு மாநகராட்சி பகுதியில் ரூ.161 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல், கோபி நகராட்சி பகுதியில் ரூ.8 கோடியே 60 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பணிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. உயர்மின் அழுத்த பாதை மற்றும் தாழ்மின் அழுத்த பாதை என கோபி நகராட்சி பகுதியில் மொத்தம் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள மின்கேபிள் அமைக்கப்படுகிறது. இதுதவிர, 24 கிலோ மீட்டர் தூரத்திற்கு சர்வீஸ் கேபிள்கள் அமைக்கப்பட உள்ளது.