திருச்சி, மார்ச் 4: திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று அதிகாலை பாதுகாப்பு பணியிலிருந்த காவலாளியின் தலையில் மர்ம நபர்கள் கல்லைப் போட்டு கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கொள்ளை அடிக்க திட்டமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி ஒத்தக்கடை பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் வணிக வளாகம் உள்ளது. இங்கு செல்போன் ஷோரூம், நகைக் கடை, புத்தகம், வங்கி உள்பட பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் காலை, மாலை என இரு ஷிப்டுகளாக செக்யூரிட்டிகள் பணியில் இருப்பார்கள். நேற்று முன்தினம் இரவு திருச்சி அம்பிகாபுரம் தங்கேஸ்வரி நகரை சேர்ந்த காவலாளியான செந்தில்குமார்(43) பாதுகாப்பு பணியிலிருந்தார். நேற்று அதிகாலை 2 மணி அளவில் வணிக வளாகத்தில் சோதனை செய்த செந்தில்குமார், பின்னர் முதல் தளத்தில் உள்ள லிப்ட் அருகே உள்ள நடைபாதையில் படுத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் தூங்கிக்கொண்டிருந்த செந்திலின் தலையில் கல்லை போட்டது. இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த செந்தில் கூச்சலிட்டதால் அருகில் பெட்ரோல் பங்க் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியிலிருந்து செக்யூரிட்டிகள், பொதுமக்கள் ஓடி வந்தனர்.