சென்னை, மார்ச் 3: பல்வேறு சிறப்பம்சங்களுடன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தனித்துவமானதாக மாற்ற முடிவு செய்துள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் 1 லட்சம் பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் இது அதிகரித்து காணப்படும். மேலும், முக்கிய நிலையமாக காணப்படும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் பூமிக்கடியில் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் இந்த நிலையம்தான் ஆசியாவின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நிலையம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.பூமிக்கடியில் மொத்தம் 3 அடுக்குகளை கொண்ட நிலையமாக சென்ட்ரல் மெட்ரோ நிலையம் திகழ்கிறது. நாள்தோறும் இந்த நிலையத்தை 10 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். சென்ட்ரல் ரயில் நிலையம், ரிப்பன் மாளிகை, சென்னை அரசு பொது மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி, பூங்கா நகர் பறக்கும் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்கள் இந்த மெட்ரோ நிலையத்திற்கு அருகில்தான் அமைந்துள்ளன.எனவே, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தை தனித்துவம் கொண்ட நிலையமாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இதற்கான அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது.