ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 3: ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட பகுதியான திருப்பாலைக்குடியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் பார்க்க உப்பூர் அல்லது சோழந்தூர் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. காரணம் திருப்பாலைக்குடியில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனை இல்லை என்பதால் தான். எனவே மாவட்ட நிர்வாகம் திருப்பாலைக்குடி, பழங்கோட்டை பால்குளம், சம்பை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நலன் கருதி விரைவில் நிரந்தரமாக ஒரு கால்நடை மருத்துவமனையை அமைத்து உரிய மருத்துவரை நியமனம் செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்களின் சிரமத்திற்கு உதவும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடை மருத்துவமனையை திறக்க வேண்டும் என கிராமப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.