திங்கள்சந்தை, மார்ச் 3: திங்கள்சந்தை- இரணியல் சாலையில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெய்யூர் தபால் நிலையம் உள்ளது. இது லெட்சுமிபுரம், ஆலங்கோடு, கண்டன்விளை, கல்லுக்கூட்டம் உள்பட 5 கிளை தபால் நிலையங்களுக்கும் தலைமை தபால் நிலையமாகவும் செயல்படுகிறது. மன்னர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த தபால் நிலைய கட்டிடம் பழுதடைந்த மழைநீர் புகுந்தது. இதனால் தபால் பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.
இதையடுத்து புதிய தபால் நிலையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதனால் இந்த தபால் நிலையம் தற்போது இரணியல் சந்திப்பில் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தபால் நிலைய புனரமைப்பு பணிகள் முடிவு பெற்று ஓராண்டு கடந்தும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் தபால் நிலையத்தில் மரம், செடி கொடிகள் வளர்ந்து மீண்டும் பாழடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே தபால் நிலையம் இரணியல் சந்திப்பு பகுதியில் சென்றதால் வாடிக்கையாளர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதோடு அரசுக்கு வாடகை செலவும் வீணாகி வருகிறது. எனவே புனரமைக்கப்பட்ட புதிய தபால் நிலையத்தை மார்ச் 5ம் தேதிக்குள் திறக்க வேண்டும். இல்லாவிட்டால் 10ம் தேதி இந்த தபால் நிலையம் முன்பு பொதுமக்களை திரட்டி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, திங்கள்நகர் பேரூர் காங்கிரஸ் தலைவர் ஜெமினீஸ் தெரிவித்துள்ளார்.