அரியலூர், மார்ச் 2: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கருத்தரங்கில் பாராட்டுச்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ரத்னா வழங்கினார். இக்கருத்தரங்கில் கலெக்டர் ரத்னா பேசும்போது, ஆசிரியர்களுக்கு ஆய்வு மனப்பான்மை மிகவும் அவசியம், கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள், வகுப்பறை மேலாண்மை, மாணவர்களது மனநலம் மற்றும் பள்ளியுடன் சமுதாயத்தின் ஈடுபாடு பற்றிய ஆய்வு மனப்பான்மையின் மூலமே பள்ளியின் தரத்தையும், மாணவர்களது அறிவையும் மேம்படுத்த முடியும். ஆசிரியர்களுக்கு மாணவர்களுடன் இணைந்து செயல்படும் செயல்பாடுகளே அவர்களது கற்றலை ஊக்கமடையச் செய்ய முடியும். தொடக்கக் கல்வியின் எதிர்காலம் குறித்த சவால்களை எதிர்நோக்கும் வழிமுறைகளை உணர்ந்து ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.