கோவை,மார்ச்.1:கோவை கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 1286 மாணவ மாணவிகள் பட்டம் பெற்றனர். கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி தலைமை வகித்தார். முதன்மை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜேனட் ஆண்டறிக்கை வாசித்தார். இவ்விழாவில் விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் அலுவலர் முன்னேற்றத் துறையின் சர்வதேச தலைவர் கொட்டூர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். அவர் பேசுகையில், தினமும் கற்றுக்கொள்வதை பழக்கமாக்க வேண்டும். ஒன்னும் தெரியாது என நினைத்து எதையும் கற்றுக்கொள்ள வேண்டும். படிப்பினை முடித்தாலும் தினமும் கற்பதை விடக்கூடாது. புதிய விஷங்களை கற்றுத் தெரிந்துகொள்ளவேண்டும். உலகில் புதிய விசயங்களை தினமும் கற்பதுதான் தலை சிறந்த ஆயுதம் என்றார். விழாவில் பிரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வெகுமதி துறையின் மூத்த இயக்குனரும் சர்வதேச தலைவமருமான பாஸ்கர் திவாரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். 12 ஆராய்ச்சியாளர்கள், இளநிலை பிரிவில் 1062 பேர், முதுநிலைப்பிரிவில் 212 பேர் என மொத்தம் 1286 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 29 மாணவ-மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.