தஞ்சை, மார்ச்1: தஞ்சை மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 21 இடங்களில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு தஞ்சை மாநகர கிளை தலைவர் சையது முஸ்தபா தலைமை வகித்தார். மாநகர செயலாளர்கள் யாசர் அராபத், பிலால், துணை தலைவர்கள் ஹாலித் அகமது, அக்பர் அலி, பொருளாளர் உமர் ஷாஜகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டு குடியுரிமைச் சட்டத்தையும், குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றமாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் டில்லி, சென்னையில் நடந்த வன்முறைகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இதேபோல் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுவாமிமலை கிளைத் தலைவர் ஜாபர் தலைமை வகித்தார். இதேபோல் நடுக்கடையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகமது பந்தர் தவ்ஹீத் ஜமாத் கிளைத் தலைவர் சாகுல் அமீது தலைமை வகித்தார். மேலும் வல்லம், திருக்காட்டுப்பள்ளி, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டிணம், மதுக்கூர், திருவிடைமருதூர் உட்பட 21 இடங்களில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.