செய்யூர், பிப். 28: கல்பாக்கம் அருகே நேற்று முன்தினம் ஆட்ேடா மீது கல்குவாரி லாரி மோதி 2 பேர் இறந்தனர். இதனை கண்டித்து, பவுஞ்சூர் சுற்று வட்டாரத்தில் இயங்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி நேற்று காலை பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. கல்பாக்கம் அருகே கூவத்தூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி நேற்று முன்தினம் மதியம் ஒரு ஷேர் ஆட்டோ புறப்பட்டது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். அதில், ஜல்லிமேடை சேர்ந்த தணிகைவேல் (33) உள்பட 5 பேர் பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை கண்டிகை அருகே ஆட்டோ சென்றபோது, எதிரே கல்குவாரியில் இருந்து ஜல்லிக்கற்களை ஏற்றி கொண்டு வேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் செல்வம், பயணி தணிகைவேல் ஆகியோர் பலியாகினர். இதை பார்த்ததும், லாரி டிரைவர் தப்பிவிட்டார். புகாரின்படி அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பெண்கள் உள்பட 200க்கு மேற்பட்டோர் கூவத்தூர் - பவுஞ்சூர் நெடுஞ்சாலை, நெல்வாய்பாளையம் கூட்ரோட்டில் திரண்டனர். அங்கு, பவுஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரிகளுக்கு வந்த லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பரபரப்பு நிலவியது.