திருவள்ளூர், பிப். 28: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2ல் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்தவகையில் திருவள்ளூர் மாவட்ட கல்வித்துறையும் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற சிறப்பை பெற தீவிர முனைப்பு காட்டி, ஆசிரியர்கள் முதல் அலுவலர்கள் வரை செயல்பட்டு வருகின்றனர். கல்வி மாவட்டம் வாரியாக அறை கண்காணிப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்கான உத்தரவுகளும், வழிகாட்டி கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் இன்றும் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே பஸ் வந்து செல்லும் கிராமங்களும் உள்ளன. இந்த கிராம மாணவர்கள் இதுவரை தான் படித்த பள்ளிக்கு தான் பஸ் வசதி பெற்றிருப்பார்கள். தற்போது வேறு பள்ளி தேர்வு மையத்திற்கு செல்லவேண்டி உள்ளது. அங்கு செல்ல போதிய பஸ் வசதி உள்ளதா? கிராமங்களுக்கு பஸ்கள் ‘கட்’ செய்யாமல் இயக்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு மாவட்ட நிர்வாகம் தக்க அறிவுரை வழங்க வேண்டும். கோடை காலம் துவங்கியதை அடுத்து மின்தேவைகள் அதிகரித்துள்ள நிலையில் தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் துவங்கி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். தினமும் இரவு 7 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையாவது மின்தடை ஏற்படாத நிலையை ஏற்படுத்த மின் துறையை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும்.