சாயல்குடி, பிப். 28: முதுகுளத்தூர் அருகே சிறுமணியேந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து கிடப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். முதுகுளத்தூர் ஒன்றியம், மேலக்கன்னிச்சேரி ஊராட்சி, சிறுமணியேந்தல் கிராமத்தில் 2004-2005ம் ஆண்டுகளில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குளியலறை, துணி துவைக்கும் இடம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டது. இரவு நேரங்களிலும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக தெருவிளக்கு மற்றும் கட்டிடத்தில் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பின்றி சுகாதார வளாகம் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி இடிந்தும், இரும்பு கதவுகள் அனைத்தும் சேதமடைந்து கிடக்கிறது. அருகிலுள்ள போர்வெல், தண்ணீர் தொட்டியும் இடிந்து தரைமட்டமாக கிடக்கிறது.