தஞ்சை, பிப். 28: தஞ்சை வடக்குவாசல் பகுதியில் புதிய சாலை அமைக்க ஜல்லி கற்கள் பரப்பி 2 மாதமாகியும் பணிகள் நடக்கவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.தஞ்சை வடக்குவாசல் நால்ரோடு பகுதியில் கடந்த 3 மாதத்துக்கு முன் சாலை அமைக்கும் பணி துவங்கியது. முதலில் சாலையை கொத்தி பெயர்த்து எடுத்து அதன்மேல் கிராவல் பரப்பப்பட்டது. கிராவல் பரப்பி ஒரு மாதம் வரை எந்த பணியும் மேற்கொள்ளவில்லை. இதனால் மழையில் செம்மண் சாலையில் பரவி நடந்து செல்வோர் முதல் வாகனங்களில் செல்வோர் வரை அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன் இதன்மேல் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டது. அத்துடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.தற்போது சாலையில் ஜல்லிக்கற்கள் பரவலாக கிடப்பால் சாசைக்கிளில் செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் செல்கின்றனர். குறிப்பாக பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அரசின் இலவச சைக்கிளில் செல்லும்போது ஜல்லிக்கற்கள் இடறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்து காயமடைகின்றனர். நடந்து செல்வோரும் காலில் செருப்பின்றி நடக்க முடியாத வகையில் கற்கள் கால் பாதங்களை பதம் பார்க்கின்றன.