புதுக்கோட்டை, பிப்.28: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் மழை வேண்டி விவசாயிகள் காமன் பண்டிகை நடத்தினர். திருவிழாவின் துவக்கமாக காமன் பண்டிகை விழா நடைபெற்றது. தீர்த்தக் குளமான நைனாரி குளத்தில் நகரிலிருந்து ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்து சேவல் அறுத்து ரசம் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து வாணவேடிக்கை மேளதாளத்துடன் காமன் மரத்தை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து தெற்கு ரத வீதியில் உள்ள அம்மன் சன்னதி அருகில் காமன் மரத்தை எழுந்தருளச் செய்து அபிஷேக ஆராதனைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பதினாறாம் நாள் இரவில் இளைஞர்களுக்கு ரதிமன்மதன் வேடமணிந்து தேரோடும் நான்கு வீதிகளின் அவர்களை சண்டையிடச் செய்து ஊர்வலமாக அழைத்து வந்து காமன் மரம் எரிக்கப்படும்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை திருவரங்குளம் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மண்டகப்படிதாரர்கள் செய்திருந்தனர்.