ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம்

புதுக்கோட்டை, மே7: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.  இந்நிலையில் இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கிய நாள் முதல் தினசரி முத்துமாரியம்மன் வீதி உலா நடைபெற்று வரக்கூடிய நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடைபெறது.

இதனை முன்னிட்டு நேற்று காலை முதல் பக்தர்கள் அழகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பால்காவடி, பறவை காவடி, மயில் காவடி, கரும்புத்தொட்டில் எடுத்தும் பல்வேறு பகுதிகளில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்ற பக்தர்கள் கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

The post ஆலங்குடி அருகே கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: