சேதுபாவாசத்திரம், பிப். 27: தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் ஆகிய 2 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் மட்டும் இங்கிருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்வர். மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுவர். விசைப்படகுகளில் இரட்டைமடி, சுருக்குமடி, சலங்கை வலை போன்ற வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தற்போது அந்த வலைகளை பயன்படுத்தாமலேயே மற்ற வலைகள் மூலம் அதிகளவு மீன் பிடித்து கரைக்கு வரும் விசைப்படகுகள் மீது இரட்டைமடி வலை பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.