நாகர்கோவில், பிப்.27: கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் வழிபாட்டுடன் நேற்று தொடங்கியது. கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முன் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பு இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான தவக்காலம் நேற்று (26ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பிஷப் நசரேன் சூசை கலந்து கொண்டார். பிரார்த்தனைக்கு பின், அவர் கடந்த ஆண்டு நடந்த தவக்கால குருத்தோலை பவனியின்போது வழங்கப்பட்ட குருத்து ஓலைகளை சேகரித்து எரித்து தயாரிக்கப்பட்ட சாம்பலால், அனைவரின் நெற்றியிலும் சிலுவை வரைந்து, ஆசி வழங்கினார்.