புதுக்கோட்டை, பிப்.26: புதுக்கோட்டை மாவட்டம் பெரும் விவசாய நிலங்களை கொண்ட பகுதியாகும். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்புவரை செழிப்பான காடுகளைக் கொண்ட புதுக்கோட்டை மாவட்டம், பருவமழை பொய்த்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது. பூமியில் அதிக சூட்டை ஏற்படுத்தும் தைல மரக்காடுகள் ஒரு வகையில் இந்த வறட்சிக்கு காரணமானதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில்அண்மையில் பெய்த மழை மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்களை நிறைத்திருக்கிறது.தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தில் 882 பணிகள் ரூ. 43 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன. இவையெல்லாம் சேர்ந்து மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 3.71 மீட்டர் உயர்ந்துள்ளதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இருப்பினும் கோடை தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் வெயில் அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஏப்ரல், மே மாதங்கள் எப்படிஇருக்கும் என்று கணிக்க முடியாத நிலையில் கண்மாய்களில் கிடக்கும் தண்ணீர் எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கும் எனத் தெரியவில்லை. இந்த நிலையில் அடுத்த மழைக்கு முன்பாக குறிப்பாக 3, 4 மாதங்களுக்குள் -மாவட்டம் முழுவதும் மீண்டும் நிலத்தடி நீர் செறிவூட்டும் பணிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.