ராமேஸ்வரம், பிப்.21: மாசி மகா சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் நடை இன்று நாள் முழுவதும் திறந்துவைக்கப்பட்டு சுவாமி சன்னதியில் அபிஷேக ஆராதனைகளும், இரவில் வெள்ளிரத உற்சவமும் நடைபெறும். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி சிவராத்திரி திருவிழாவின் எட்டாம் நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அதிகாலை துவங்கி இரவு முழுவதும் கோயில் நடைதிறக்கப்படும். அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து ஸ்படிகலிங்க பூஜையும் தொடர்ந்து சுவாமி, அம்பாள் சன்னதியில் கால பூஜைகளும் நடைபெறும். காலை 9 மணிக்கு தங்க கேடயத்தில் நடராஜர் புறப்பாடாகி வீதியுலா நடைபெற்று கோயில் அனுப்பு மண்டபத்தில் பட்டயம் வாசித்தல் வைபவம் நடைபெறும். பகல் முழுவதும் கோயில் நடை திறந்து சுவாமி சன்னதியில் இடைவிடாது சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருள வீதியுலா நடைபெறும். மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் விடியும் வரை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாள் சன்னதியில் அபிஷேகம் நடக்கும் என்பதால் இரவு முழுவதும் தடையில்லாமல் பக்தர்கள் தரிசனமும் நடைபெறும்.