ராமநாதபுரம், பிப். 21: மிகப்பழமையான பாரம்பரியம் கொண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன. வேறு இடங்களில் வசித்தாலும் மகாசிவராத்திரி அன்றும், மறுநாளும் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. சிவராத்திரி அன்று சைவம் மட்டுமே கோயில்களில் சமைத்து சாப்பிடுவர். அன்றிலிருந்து மூன்றாவது நாள் களரியன்று பாரிவேட்டை நடத்தி அசைவம் சாப்பிடுவதோடு வழிபாடு நிறைவு பெறும். சிலர் சிவராத்திரி அன்றும், சிலர் மூன்று நாட்களும் கோயிலில் தங்கி இருப்பார்கள். இன்று மகா சிவராத்திரி என்பதால் நேற்று முதல் குலதெய்வ கோயில்கள் நோக்கி லட்சக்கணக்கானோர் சென்ற வண்ணம் உள்ளனர். இன்று வழிபாடு நடத்துவதற்கான முன்னேற்பாட்டு பணிகளை செய்து வருகின்றனர். இதனால் மற்ற நாட்களில் ஆள் நடமாட்டமே இல்லாமல் காட்டுப்பகுதிக்குள் இருக்கும் கோயில்கள் கூட நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது. அனைத்து குலதெய்வ கோயில்களுக்கும் கார்கள், வேன்கள், டூவீலர்களில் என கூட்டம் கூட்டமாக பக்தர்கள் சென்றனர். இதில் அம்மன், கருப்பணசாமி, அய்யனார், முனியாண்டி கோயில்களே ஏராளமானவர்களுக்கு குல தெய்வமாக உள்ளன.