ஊத்துக்கோட்டை, பிப். 20:பெரியபாளையம்-புதுவாயல் சாலையில் ராள்ளபாடி சுடுகாட்டில் கொட்டப்பட்ட குப்பைகள், ‘தினகரன்’ செய்தி எதிரொலியால் அதிரடியாக அகற்றப்பட்டது. குப்பை கிடங்கு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியபாளையம் ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு புகழ் பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பண்டங்களை உண்டு விட்டு, அங்கேயே குப்பைகளை போட்டுவிட்டு செல்கிறார்கள். இவ்வாறு பக்தர்கள் போடும் குப்பைகளும், கடை மற்றும் வீடுகளில் சேரும் குப்பைகளையும், பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை வண்டியில் எடுத்துச் சென்று பெரியபாளையம்-புதுவாயல் சாலையில் உள்ள மயானத்தில் கொட்டுகிறார்கள். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.