குஜிலியம்பாறை, பிப். 20: குஜிலியம்பாறையில் கோடைக்கு முன்பே நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டதால் கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியம் மிகவும் வறட்சியான பகுதியாகும். மாவட்டத்தின் வடகோடியில் கடைசியில் கரூர் மாவட்ட எல்லையை ஒட்டியவாறு அமைந்துள்ளது. குஜிலியம்பாறை ஒன்றியத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே வடகிழக்கு பருவமழை முற்றிலும் பொய்த்து விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள குளங்கள், விவசாய கிணறுகள், வறட்டாற்று ஓடைகளில் முற்றிலும் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதலபாதாளத்தில் இறங்கி விட்டது. இதனால் வாழ்வதாரத்திற்காக குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் செம்மறி ஆடு, வெள்ளாடு, கறவை மாடுகள் என கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.