சென்னை, பிப். 19: வீட்டுக்கு சென்று தகராறு செய்ததால் கள்ளக்காதலியின் தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை, ஜீவாநகர், மெயின் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (40). இவரது மனைவி யுவராணி (35). இவர்களது மகன் சஞ்சய். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுக்கு முன்பு கணவனை பிரிந்து, செங்கல்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு யுவராணி சென்றுவிட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் தனலட்சுமி (37) என்பவருக்கும், சந்திரசேகருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திடீரென தனலட்சுமியின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சந்திரசேகர் அவரைவிட்டு பிரிந்துசென்று விட்டார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு தனலட்சுமிக்கும், சந்திரசேகருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு சந்தித்து பேசியுள்ளனர். இதனிடையே பாலியல் வழக்கு தொடர்பாக தனலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதன் பிறகு வெளியில் வந்த தனலட்சுமி, சந்திரசேகருடன் செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுத்து பேசவில்லை என தெரிகிறது. இதையடுத்து தனலட்சுமி, அவரது தாய் ரத்னாவதி (எ) ரத்னா (58) மற்றும் தனலட்சுமியின் மகள் ஷாலினி ஆகியோர் நேற்று சந்திரசேகரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர்.