கோவை, பிப். 19: கோவை மதுக்கரை அருகே காட்டு யானை நடாமட்டம் கண்காணிக்க 22 பேர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை மதுக்கரை, சுகுணாபுரம், சுந்தராபுரம், மாச்சம்பாளையம், குனியமுத்தூர் பகுதிகளில் சுற்றியது. இந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து எட்டிமடை வனத்திற்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒற்றை ஆண் யானை ஒன்று பாலக்காடு ரோடு ராணுவமுகாம் அருகே உள்ள மடத்துக்காடு பகுதிக்கு வந்தது. பின்னர், அப்பகுதியில் இருந்த ஒரு தோட்டத்திற்குள் நுழைந்த வாழைகளை ருசித்தது. யானை நடமாட்டம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் விரட்டியடித்தனர்.