பேரையூர், பிப். 18: அங்கன்வாடி மையத்தை கட்டிடத்தர வலியுறுத்தி பேரையூர் தாலுகா அலுவலகத்தை பூட்டி இந்திராகாலனி மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பேரையூர் அருகே சந்தையூர் உள்ளது. இங்கு உள்ள இந்திரா காலனியில் இரு பிரிவினர்களிடையே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளதில் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஒரு பிரிவினர் கோயில் சுவர் என்றும், மற்றொரு பிரிவினர் தீண்டாமைச்சுவர் என்றும் கூறியதால் பிரச்னை ஏற்பட்டது. அதில் ஒருபிரிவினர் சந்தையூர் இந்திரா காலனியில் தீண்டாமைச்சுவரை அகற்றக்கோரி ஊரைக்காலி செய்து மலையடிவாரத்தில் குடியேறி போராட்டம் நடத்தினர். இதில் இருபிரிவினர்களிடையே அப்போது இருந்த மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு கட்டுப்பட்டுள்ள சுற்றுச்சுவரின் வடக்குப்பகுதியில் 2மீட்டர் அளவில் சுவரை உடைத்து அங்குள்ள காலியிடத்தில் இரு பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் அங்கன்வாடியோ அல்லது சமுதாயக்கூடமோ கட்டிட உத்தரவிட்டிருந்தார்.இந்த நிலையில் பேரையூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு அலுவலகம் செல்லும் நுழைவு வாயிலின் கேட்டை தமிழ்ப்புலிகள் அமைப்பினர் பூட்டி போராட்டம் நடத்தினர். மாவட்டத்தலைவர் சந்தையூர் அறிவாளன் தலைமையில் இந்திராகாலனி பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.