இளையான்குடி, பிப்.17: இளையான்குடி பகுதியில் பருத்தி விதைகளை நடவு செய்யும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இளையான்குடி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கிராமம், சூராணம், சாத்தனூர், அளவிடங்கான், விசவனூர், கோட்டையூர், சாத்தணி, கீழநெட்டூர், கலைக்குளம் ஆகிய பகுதிகளில் நடப்பாண்டிற்குரிய பருத்தி சாகுபடி செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக கண்மாய், ஊருணி, பண்ணைக்குட்டை ஆகியவற்றில் மழைநீர் தேங்கியுள்ளதால், அறுவடை செய்த நெல் வயலில், பருத்தி விதைகளை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 3 கிலோ பருத்தி விதைகள் வீதம் நடவு செய்து வருகின்றனர். கண்மாய் தண்ணீரில் நடவு செய்த நாட்களிலிருந்து 4வது நாளில் மண்ணிலிருந்து வெளிவரும் பருத்தி செடி, ஆழ்துளை கிணற்று தண்ணீரில் நடவு செய்வதால் 10 நாட்கள் ஆகிறது.