அறந்தாங்கி, பிப்.17: அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டையைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது வீட்டில் வளர்க்கும் கால்நடைகளின் தேவைக்காக நாகுடி பகுதிக்கு சரக்கு வாகனத்தில் சென்று வைக்கோல் வாங்கினார். பின்னர் வைக்கோலை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு, நாட்டுமங்கலம் வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். நாட்டுமங்கலம் வீரமாகாளியம்மன் கோயில் அருகே வரும்போது, சாலையின் ஓரத்தில் தாழ்வாக சென்ற மின்கம்பி, வைக்கோல் மீது உரசியதால், வைக்கோல் திடீரென்று தீப்பற்றியது. உடனே வாகனத்தில் இருந்தவர்கள் அதில் இருந்து இறங்கி காயமின்றி உயிர்தப்பினர். சரக்கு வாகனம் தீப்பற்றி எரிவது குறித்து அப்பகுதி மக்கள் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தெரிவித்தனர். தகவலின்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் சரக்கு வாகனம் முற்றிலும் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் தொடரும் தீவிபத்து: கஜா புயலின்போது அறந்தாங்கி பகுதியில் நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு தரையில் சாய்ந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் லேசாக சாய்ந்ததால், மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. கடந்த ஆண்டு நாட்டுமங்கலம் வீரமாகாளியம்மன் கோயில் அருகே வைக்கோல் ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஒன்று தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசி தீப்பிடித்து சேதமானது. அப்போது அப்பகுதி பொதுமக்கள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க வலியுத்தினர். ஆனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நடவடிக்கை எடுக்க வில்லை.