சேலம், பிப்.13: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. தேர்தலையொட்டி சொந்த ஊரில் பணிபுரிந்தவர்கள் மற்றும் 3 ஆண்டுக்கும் மேலாக ஒரு இடத்தில் பணிபுரிந்தவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தங்களை பழைய இடத்திற்கே மாற்றம் செய்ய வேண்டும் என சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது:சேலம் மாவட்டத்தில் 2 கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலானது, கலெக்டர் வழிகாட்டுதலின்படி சுமூகமாக நடத்தப்பட்டது. பல்வேறு திட்ட பணிகள், பலதரப்பட்ட அரசியல் நெருக்கடிகள், மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுதல் மற்றும் ஊழியர் பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் ஊரக வளர்ச்சித்துறையினர் தேர்தலை சிறப்பாக நடத்தியுள்ளனர்.