கோவை, பிப்.11: குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகள் வரும் மே மாதமும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதமும் ழுமையாக முடிவடைந்து மக்கள் பயனுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடை திட்டம் ரூ. 591.14 கோடியிலும் குடிநீர் திட்டப்பணிகள் ரூ. 202.30 கோடியிலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டங்கள் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் வார்டு 87 முதல் 100 வரை உள்ள 14 வார்டுகள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் மகேஸ்வரன் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை ஆய்வு செய்து, பணிகளை திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.