நாகர்கோவில், பிப்.11: திறக்கப்பட்டு ஓராண்டு ஆகியுள்ள நிலையில் முக்கடல் அணை பூங்கா பராமரிப்பின்றி போடப்பட்டுள்ளதால் சிற்பங்கள் உடைந்து சீரழிய தொடங்கியுள்ளது. நாகர்கோவில் மாகராட்சிக்கு உட்பட்ட முக்கடல் அணையை அழகுபடுத்தவும், இங்கு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கும் நகராட்சி முடிவு செய்து அங்கு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிறுவர் பூங்கா தேவையில்லாத ஒன்று என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்த போதிலும் எந்தவித கருத்து கேட்பும் இன்றி மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக முக்கடல் அணையின் முன் பகுதியில் 12 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பில் 2 சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியில் அமைந்துள்ள இந்த பூங்காவில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு பூங்கா அமைக்க முடிவுசெய்யப்பட்டது. அதற்காக அம்ரூத் திட்டத்தில் மேலும் ரூ.96 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 3வது அபிவிருத்தி சிறுவர் பூங்கா 12 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. மொத்தம் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 96 லட்சத்து 80 ஆயிரம் செலவில் 3 சிறுவர் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா மொத்தம் 24 ஆயிரத்து 600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் முக்கடல் அணை பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டிருந்தது.