சாயல்குடி, பிப்.7: கிழக்கு கடற்கரை சாலை வழித்தடத்தில் உள்ள கடலாடி மலட்டாறு முக்குரோட்டில் விபத்துகளை தடுக்க தடுப்புகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தூத்துக்குடி-நாகப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக செல்கிறது. சாயல்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையின் முக்கிய இடமாக கடலாடி மலட்டாறு முக்குரோடு உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு கடலாடி சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர். அருகே மாரியூர் கடற்கரை மற்றும் பழமையான சிவன்கோயில் உள்ளதால் அதிகளவில் பக்தர்களும் வந்து செல்கின்றனர். இச்சாலையில் பல்வேறு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகர்களும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.