ராயனூர் நான்கு ரோடு பகுதியில் திறந்தே கிடக்கும் வடிகாலின் மீது சிலாப் வைக்க மக்கள் கோரிக்கை

கரூர், பிப். 6: ராயனூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலகம் அருகே திறந்த நிலையில் உள்ள வடிகாலின் மீது சிலாப் வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ராயனூர் நான்கு ரோடு பகுதியில் இருந்து தாந்தோணிமலைக்கு செல்லும் பிரதான சாலையோரம் வேளாண்மை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் திறந்த நிலையில் சாக்கடை வடிகால் செல்கிறது. மிக ஆழமான நிலையில் இந்த வடிகால் திறந்த நிலையில் உள்ளதால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் இதன் வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். ஒருசிலர் வேகமாக வரும்போது தடுமாறி சாக்கடைக்குள் விழுந்து எழுந்து காயத்துடன் செல்லும் சம்பவமும் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. எனவே சிரமங்களை தடுக்கும் வகையில் திறந்த நிலையில் உள்ள வடிகால் மீது சிலாப் வைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: