பரமக்குடி, ஜன.31: பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் நலிந்தோர் நிதியுதவித் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவர் இறந்தால் வழங்கப்படும் ரூ.20 ஆயிரம் கிடைக்காமல் பெண்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பாக நலிந்தோர் நிதி உதவித்திட்டத்தின் கீழ் முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப தலைவர் இறந்தால் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில், குடும்பத் தலைவர் இறந்தால், ஆறு மாதத்திற்குள் தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பித்து நிதி உதவி பெற்றுக் கொள்ளலாம். பரமக்குடி தாலுகா அலுவலகத்தில், கடந்த 2013ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலும் 150க்கும் மேற்பட்டவர்கள் குடும்ப நிதி உதவி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் விண்ணப்பதாரர்களுக்கு நிதி உதவி வழங்கப்படாமல் உள்ளது. விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து வருடக்கணக்கில் பரமக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வந்து அலைந்து செல்கின்றனர். இவர்களுக்கு சமூக நலத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் முறையாக பதிலளிக்காமல் அலட்சியத்துடன், அநாகரிகமாக நடத்துவதாக புலம்புகின்றனர். தாலுக்கா அலுவலகத்தில் பணியாற்றும் சமூக நலத்துறை ஊழியர்கள் சில விண்ணப்பதாரர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நிதி பெற்று தரவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.