அரியலூர், ஜன. 29: செந்துறையில் தைப்பூச திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. அரியலூர் மாவட்டம் செந்துறை நெய்வனத்தில் சிவசுப்பிரமணியர் கோயிலில் 38ம் ஆண்டு பழனி பாதயாத்திரை குழு சார்பில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி மஞ்சள், பன்னீர், பால், சந்தனம், தேன், திரவியம் உள்ளிட்ட 16 வகை வாசனை பொருட்களால் முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து வரதராஜபெருமாள் கோயிலில் இருந்து திருக்கல்யாணத்துக்கு தேவையான புடவை, வேட்டி, மாலை, தாலி உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக எடுத்து கொண்டு முக்கியஸ்தர்கள் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதி வழியாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். பின்னர் முருகன் வள்ளி தெய்வானை தெய்வங்களுக்கு பட்டுப்புடவை, வேட்டி உடுத்தி மலர்களால் அலங்காரம் செய்து மாலை அணிவித்தனர். பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி வீதியுலா நடந்தது.