ராமநாதபுரம், ஜன.29: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் வீரராகவ ராவ் தலைமையில் நடைபெற்றது. விழாவில், கலெக்டர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 20ம் தேதி தொடங்கப்பட்டு மக்களிடையேயும் மாணவர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்திட பேரணிகள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கட்டுரை போட்டி பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதுபோன்று வருங்காலங்களில் சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆண்டிற்கு ஒரு கோடி மக்கள் வருகை புரிந்து செல்கின்றனர். இதனால் அதிக போக்குவரத்து நிறைந்த மாவட்டமாக இருக்கிறது. இக்காரணத்தினால் விபத்தில்லா மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகத்தால் பல தொடர் நடவடிக்கைகள் காவல் மற்றும் போக்குவரத்து துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் மட்டுமே விபத்தில்லா மாவட்டத்தை உருவாக்க முடியும்.விபத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் இருப்பதே. அவ்வாறு சாலை விதிகளை கடைப்பிடிக்காமல் வாகனத்தை இயக்கும் நபர்களால் சாலை விதிகளை சரியாக பின்பற்றும் நபர்களுக்கும் விபத்து ஏற்படுகிறது.