கீழக்கரை, ஜன.28: கீழக்கரை அருகே தில்லையேந்தல், மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் முதல் கிராமசபை கூட்டம் நடைபெற்றது, இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தில்லையேந்தல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், துணை தலைவர் மஹ்சூக்பானு, ஒன்றிய கவுன்சிலர் கருத்தமுத்து ஆகியோர் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் மங்களசாமி வரவேற்றார். இதில் அனைத்து கிராமங்களிலும் தண்ணீர் வசதி செய்து கொடுப்பது, சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். மாயாகுளம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி பாக்கிநாதன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மண்டல துணை வட்டார அலுவலர் நரசிம்மன், திருப்புல்லாணி ஒன்றிய அதிமுக துணை செயலாளர் பாக்கியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார்.