பட்டப்பகலில் வீட்டை உடைத்து 15 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர், ஜன. 24 : திருவள்ளூர் அருகே டெய்லரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகைகள், ₹80 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ்.  இவரது மனைவி அந்தோணிபிரியா(43). இவர் தனது வீட்டிலேயே டெய்லர் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று காலை 10 மணிக்கு தனது வீட்டை பூட்டிவிட்டு, மாடுகளை அருகில் உள்ள காலி நிலத்தில் மேய ஒட்டிச் சென்றார்.  அங்கு  மாடுகளை விட்டுவிட்டு மீண்டும் 11 மணிக்கு வீடு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்தோணிபிரியா அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு,  அதில் வைத்திருந்த 15 சவரன் நகைகள், ₹80 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது.இதுகுறித்து அவர் மப்பேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்துசென்று பார்வையிட்டனர்.   கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: