திருவண்ணாமலை, ஜன.24: திருவண்ணாமலையில், அரசுப் பள்ளி 6ம் வகுப்பு மாணவி கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஒரு கி.மீ. தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை முயற்சியை மேற்கொண்டார். அவரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உற்சாகப்படுத்தினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா முனுகப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரன், நெசவு ெதாழிலாளி. அவரது மகள் சுருதி(11). அதே கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கண்களை துணியால் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டுதல், எண்கள், நிறங்களை சொல்லுதல் என தனித்திறமை பெற்றுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலையில் தன்னுடைய சாதனை முயற்சியை வெளிப்படுத்தினார். அதையொட்டி, மாணவி சுருதி இரண்டு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரம் திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி சாதனை செய்தார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, முதன்மைக் கல்வி அலுவலர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அருள்செல்வன், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி ஆகியோர், மாணவியுடன் சைக்கிளில் சென்று உற்சாகப்படுத்தினர்.