பரமக்குடி, ஜன.23: பரமக்குடியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ராக்கிங் கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவதால், கவுன்சலிங் அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களிடையே ராக்கிங் மற்றும் மோதல்கள் அதிகரித்து வருகிறது. இந்தக் கல்வியாண்டில் மட்டும் சுமார் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடையே சாதி ரீதியான மோதல்கள் மற்றும் ராக்கிங் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. சில மோதல்களில் காவல் நிலையங்களில் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. பரமக்குடி சுற்றுவட்டார தனியார் பள்ளிகளில் மாணவர்கள் பிளேடு, கத்தி உள்ளிட்ட சிறிய ஆயுதங்களுடன் பள்ளிக்கு வருவது, மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதேபோல் கடந்தாண்டு ஒரு தனியார் பள்ளியில் மாணவர்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டு தாக்கி கொண்டனர். இந்த நிலையில் பரமக்குடியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவரை, சில தினங்களுக்கு முன்பு பிளஸ்2 மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து சக மாணவி ஒருவரை கேலி செய்ய கூறியுள்ளனர்.