பரமக்குடி, ஜன.22: பரமக்குடி நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற போக்குவரத்து விழிப்புணர்வு குறித்த பேரணி நடைபெற்றது. ஹெல்மெட் அணியாமல் டூவீலர்களில் வந்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து போக்குவரத்து விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் சாலை போக்குவரத்து வார விழாவினை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, பரமக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகத்தின் சார்பாக சாலை போக்குவரத்து வார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு போக்குவரத்து விதிமுறைகள், ஹெல்மெட் அவசியம், வாகனங்களை இயக்கும் பொழுது பின்பற்றப்பட வேண்டிய சட்ட திட்டங்கள் குறித்த பதாதைகளை ஏந்தியபடி, போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.