சாயல்குடி, ஜன.22: சாயல்குடி கடற்பகுதியில் கடல் அலையால் கரைகள் சேதமடைந்து பனை மரங்கள் விழுந்து வருவதால், தடுப்புச்சுவர் கட்ட மீனவ கிராம மக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் வளைகுடா கடற்பகுதியான கன்னிராஜபுரம், ரோச்மா நகர், நரிப்பையூர், மூக்கையூர், கீழமுந்தல், மாரியூர், வாலிநோக்கம் வரையிலான 15க்கும் மேற்பட்ட கடற்கரை கிராமங்களில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி கடற்கரை மிக ஆழமானது என்பதால் எந்நேரமும் கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாக இருக்கும். இரவு நேரங்கள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி காலங்களில் கூடுதலாக அலை சீற்றமாக இருக்கிறது. பேரலை ஏற்பட்டு, கரையை சேதப்படுத்தி வருகிறது.