சிவகங்கை, ஜன.22: பிறப்பு, இறப்பு நிகழ்ந்தவுடன் 21 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் தாமத கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பிறப்பு, இறப்பு நிகழ்ந்தவுடன் 21 நாட்களுக்குள் அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலரிடம் தெரியப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் தெரியப்படுத்த தவறும்பட்சத்தில் தாமத பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். 2017அக்டோபர் முதல் தாமத கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு மேல் தாமதமானால் தாமத பதிவு கட்டணம் ரூ.100. ஒரு மாதத்திற்கு மேல் தாமதமானால் ரூ.200, ஒரு ஆண்டிற்கு மேல் தாமதமானால் ரூ.500 தாமத கட்டணம் செலுத்த வேண்டும். குழந்தையின் பெயரை ஒரு ஆண்டிற்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.