பழநி, ஜன. 22: பழநியில் நகைக்கடை உரிமையாளரை போலீசார் அழைத்து சென்ற நிலையில் கடத்தல் புரளியால் பரபரப்பு
ஏற்பட்டது. பழநி டவுன், சிதம்பரநாதன் சந்தை சேர்ந்தவர் தன்ராஜ் (63). பழநி பஸ்நிலையம் எதிரில் நகைக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் தன்ராஜ் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் உறங்கி கொண்டிருந்தனர். நேற்று காலை சுமார் 5 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் தன்ராஜின் வீட்டின் கதவை தட்டி உள்ளனர். தன்ராஜ் கதவை திறந்ததும் அக்கும்பல் தாங்கள் போலீஸ் என்றும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அவரை அவசரமாக வேனில் அழைத்து சென்றுவிட்டனர். நேற்று காலை 11 மணி வரை தன்ராஜை அழைத்து சென்றது யார் என்று தெரியவில்லை. உள்ளூர் போலீசாருக்கும் அழைத்து சென்றது யார் என்ற விபரம் தெரியாததால் தன்ராஜ் மர்மநபர்களால் கடத்தி செல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியது. இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டது. தன்ராஜின் வீட்டிற்கு உறவினர்கள், நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் குவிந்தனர். டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீசார் தன்ராஜின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்தபோது வேனில் தன்ராஜ் அழைத்து செல்லப்படுவது உறுதியானது.